

கடலூர்: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, கடலூரில் பாமக.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்துசெய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் கடலூரில் உழவர்சந்தை அருகே பாமகவினர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன் தலைமையில், ‘இந்த தீர்ப்பு சமூகநீதி மறுக்கப்பட்ட நாள்’ என அறிவித்து, கண்களில் கருப்பு துணி கட்டியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டே பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதுப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.