தாய், மாற்றுத்திறனாளி மகள் தாக்கப்பட்ட விவகாரம்: மானாமதுரை டிஎஸ்பிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
மதுரை: சொத்து பிரச்சினையில் தாய், மகளை போலீஸார் தாக்கியது தொடர்பான புகாரை முறையாக விசாரிக்காத மானாமதுரை டிஎஸ்பிக்கு கண்டனம் தெரிவித்து, அவர் மீது துறைரீதியாக நட வடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நாகலெட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திறனாளி. எனக்கு திருமணம் ஆகவில்லை. எங்கள் குடும்பத்துக்கும் வீரமணி என்பவர் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ளது. வீரமணி அளித்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் ஆய் வாளர் ஆதிலிங்கம் எங்களை வீட்டிலிருந்து வெளியேறுமாறும், வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறும் என் தாயாரை மிரட்டினார். காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் மற்றும் போலீ ஸார் 6.1.2022-ல் எங்கள் வீட்டுக் குள் அத்துமீறி நுழைந்து என்னையும், தாயாரையும் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த நாங்கள் மானாமதுரை அரசு மருத்துவ மனையிலும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றோம்.
எங்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஎஸ்பியிடம் 7.1.2022-ல் புகார் அளித்தோம். இதுவரை விசாரணை நடத்தவில்லை. எங்கள் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனு குறித்து விசாரிக்க டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர், காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாரை பாதுகாக்கும் நோக்கத்தில் மோசமான விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர், அவரது தாயார் இருவரும் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ளாமல் மனு தாரரின் புகாரை டிஎஸ்பி முடித் துள்ளார்.
இதற்காக மானாமதுரை டிஎஸ்பியை நீதிமன்றம் கண்டிக் கிறது. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் தாக்கல் செய்துள்ள மருத்துவ ஆவணங்களும், விபத்து பதிவேடும் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாரின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது.
எந்தத் தவறும் செய்யாத நிலையில் மனுதாரரையும், அவ ரது தாயாரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். எனவே மானாமதுரை காவல் ஆய்வாளர், போலீஸார் மீது மனுதாரர் அளித்த புகார் மீது சிவகங்கை எஸ்பி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை 12 வாரத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
