Published : 31 Mar 2022 04:51 PM
Last Updated : 31 Mar 2022 04:51 PM

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை கோரி அமலாக்கப் பிரிவு வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப் படம்

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 -2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், பணி வழங்குவதாக சோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரியும் அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு விசாரித்தது.அப்போது, அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை.

செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யபட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வழங்க மறுப்பது அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த ஆவணங்களை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x