Published : 31 Mar 2022 06:14 AM
Last Updated : 31 Mar 2022 06:14 AM

ஜவ்வாது, கொல்லிமலைப் பகுதிகளில் சாகச பயணத்துக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை

தமிழகத்தில் கொல்லி மலை மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் சாகசப் பயணங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்திய பயணம் மற்றும் சுற்றுலா நிபுணர்கள் சங்கத்தின் (ஐஏடிடிஇ) தமிழக கிளை தொடக்க விழா சென்னை தி.நகரில் நேற்றுநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், கிளையைத் தொடங்கி வைத்தார். அதன்பின் தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த சிறப்பு காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கரோனா பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சிறப்புநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதுதவிர, கொல்லி மலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட முக்கியமலைப் பகுதிகளில் சாகசப் பயணங்களை அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும். மேலும்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை (டிடிடிசி)நவீனப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பிரத்யேக செயலி மூலம் பயனாளர்கள் தேவையான தகவல்களைப் பெற முடியும். இவர் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x