விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவரை வீட்டுக்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவரை வீட்டுக்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாடசாமி என்பவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் 4 மணி நேரம் விசாரணை செய்தனர்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத்அகமது, பிரவீன்,மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

அதையடுத்து ஹரிஹரன் உட்பட 4 பேரும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஹரிஹரனுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசிய உறவினர் ஒருவரிடமும், நண்பர்கள் 3 பேரிடமும் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் உள்ள மாடசாமியின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் நேற்று பிற்பகல் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு அதிகாரியான டிஎஸ்பி வினோதினி மற்றும் போலீஸார், மாடசாமியை முகத்தை மூடி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 4 மணி நேரம் விசாரணை நீடித்தது.

இதேபோல் ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன் ஆகியோரது வீடுகளிலும், அவர்களது நண்பர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டு உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in