இலங்கையை போல 2 ஆண்டுகளில் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி நிலை வரும்: சீமான் கருத்து

இலங்கையை போல 2 ஆண்டுகளில் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி நிலை வரும்: சீமான் கருத்து
Updated on
1 min read

திருச்சி: இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை, இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவிலும் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த 2015-ல் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுமனோகரன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்ளிட்ட 26 பேர் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி திரிவேணி, இவ்வழக்கை ஏப்.21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் சீமான் அளித்த பேட்டி:

குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் துபாய் சென்ற பயணச் செலவை திமுக ஏற்றுள்ளதாக கூறுகின்றனர். இதில், முதல்வருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். அவர்களின் செலவையும் திமுக ஏன் ஏற்க வேண்டும்? என்பதை விளக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராக தேசிய அளவிலான ஒரு மாநாட்டை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி அழுத்தம் கொடுத்தால் மட்டுமே நீட் தேர்வு தகர்க்கப்படும்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை, இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவிலும் வரும். அதற்கு மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in