Published : 30 Mar 2022 06:53 PM
Last Updated : 30 Mar 2022 06:53 PM

நகைகடன் தள்ளுபடி கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோவை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள 38 கிராம் எடையுள்ள தங்க நகைகளுக்கு அரசு உத்தரவுப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசும், கோவை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை நியூ சித்தாபுதூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த எம்.தமிழ்செல்வி தாக்கல் செய்திருந்த மனுவில் ‘‘நான் எனக்கு சொந்தமான மொத்தம் 44 கிராம் எடையுள்ள கல் உள்ள தங்க நகைகளை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 2020-ம் ஆண்டு டிச.24-ம் தேதியன்று அடமானமாக வைத்து கடன் பெற்றேன். நகை மதிப்பீட்டாளர் 44 கிராம் மொத்த எடையுள்ள எனது நகைகளில் கல் நீங்கலாக 38 கிராம் தங்கத்துக்கு மட்டுமே கடன் வழங்க பரிந்துரைத்தார். அதன்படி 38 கிராம் தங்கத்துக்கு கடன் பெற்று அதற்கு முறையாக வட்டி செலுத்தி வந்தேன். திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள 40 கிராமுக்கு ( 5 சவரன்) குறைவாக உள்ள தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 பவுனுக்கு கீழ் உள்ள தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி எனது தங்க நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எனது நகைகள் 44 கிராம் எடை உடையது எனக்கூறி எனக்கு இந்த சலுகையை வழங்க வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனது தங்க நகைக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி வங்கி அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென எனது நகைகள் மார்ச் 30 அன்று ஏலம் விடப்படும் எனக்கூறி வங்கி நிர்வாகம் கடந்த மார்ச் 7-ம் தேதி எனக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது சட்டவிரோதம் என்பதால் எனது நகைகளை ஏலம் விட வங்கி நிர்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு வங்கி நிர்வாகம் 38 கிராம் எடையுள்ள தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கியுள்ளது என்பதால் அரசு உத்தரவுப்படி எனது நகைக்கடனை தள்ளுபடி செய்து நகைகளை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.என்.முரளிமோகனும், அரசு தரப்பில் கூடுதல் அரசு ப்ளீடர் அருண்குமாரும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் கல் நகைகளை ஏலம் விட இடைக்காலத்தடை விதித்தும், இதுதொடர்பாக தமிழக அரசும், கோவை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகமும் இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x