ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல்: 9 பேரின் முன்ஜாமீன் மனு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 

ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல்: 9 பேரின் முன்ஜாமீன் மனு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 
Updated on
1 min read

மதுரை: ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 9 பேரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை கோரிப்பாளையம், ராமநாதபுரம் திருவாடனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பேசியவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த அசன்பாட்ஷா, அபிபுல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மதுரை, திருவாடனையில் ஆர்ப்பாட்டங்களுக்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்தோம். நாங்கள் யாரும் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், மனுதாரர்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் செய்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் மனுதாரர்கள் எதுவும் பேசவில்லை. இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸாரிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. திடீரென டிராக்டரை மேடையாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஒலிபெருக்கி பயன்படுத்தியுள்ளனர். மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் உள்ளன. நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in