Last Updated : 30 Mar, 2022 04:29 PM

 

Published : 30 Mar 2022 04:29 PM
Last Updated : 30 Mar 2022 04:29 PM

திட்டுவதற்குக் கூட அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்: ஆளுநர் தமிழிசை

நிகழ்வில் பேசிய தமிழிசை

தஞ்சாவூர்: இணையத்தில் திட்டுவதற்குக் கூட அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள் என தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று நடைபெற்றது.

ஆய்வரங்கத்துக்கு பல்கலைக் கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் முன்னிலை வகித்தார். ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது: "நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதால், இந்த ஊரில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும்.

மரக்கன்றுகள் நடுவது எனக்கு மிகுந்த ஆர்வத்தை தரும் செயல், அந்த வகையில் இந்த பல்கலைக் கழகத்தில் பலா மரக்கன்றை நட கொடுத்தார்கள். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால், பாரதியின் புகழ் வீசும் எட்டயபுரம், திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மண் கொண்டு வந்திருந்தார்கள் இந்த மண்ணின் புகழோடு, மரத்தின் வாசனையுடன் சேர்ந்து இங்கு வீசட்டும்.
பாரதியாரின் பாடல்கள் குறித்து நாம் நிறைய அறிந்திருப்போம், அவரின் உரைநடை புத்தகங்களையும் நிறைய நாம் அறிந்து கொள்ள வேண்டும். உடல் நலனை பெறுவது குறித்து பாரதியார் தனது உரைநடையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். உடல்நலம் பேணுவது மிகவும் முக்கியம் நாம் சங்ககாலம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், கரோனா காலம் என்பதை இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

உலக அளவில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நமது உணவு முறை அதை மாற்றி விட்டது. நமது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் கலாச்சாரத்தை, தற்போதைய கரோனா பரவலுக்கு பிறகு உலக நாட்டினரும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

உடல் நலமும் மன நலமும் பெற்றால் எல்லா நலமும் பெறலாம் என பாரதியார் கூறியுள்ளார். பெண்கள் உயர்வுக்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். அவருக்கு பெண்கள் அனைவரும் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனவே, இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள்.

இணையத்தின் மூலம் திட்டுவதற்கு கூட. அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள். விமர்சனம் என்பது தமிழரின் பாங்கு, ஆனால் அதை மரியாதையான சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்.

தற்போது என்னை, அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர், சமூக வலைத்தளத்தில் "இரு மாநிலங்களுக்கு அவள் ஆளுநரா" என்று ஒருமையில் பயன்படுத்தி தெரிவித்திருந்தார். இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம், ஒரு தமிழச்சி இருமாநிலங்களையும் ஆண்டு கொண்டிருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே திட்டுவதற்கு கூட தமிழ் மொழியை மரியாதையுடன் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x