Published : 30 Mar 2022 02:06 PM
Last Updated : 30 Mar 2022 02:06 PM

நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமார் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். மேலும், மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது நவின் குமாரும், மகேஷும் பங்குதாரர்களாக இல்லை எனவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை மிரட்டி அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் கணக்கு சம்பந்தமான ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

நவின்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஜெயக்குமாரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தபனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டரார்.

2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா 2 வார திங்கட்கிழமையில் மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x