Published : 30 Mar 2022 12:24 PM
Last Updated : 30 Mar 2022 12:24 PM

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது நியாயமல்ல: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று ராமதாஸ் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.5.29, டீசல் விலை ரூ.5.33 உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அவற்றின் இரு சக்கர ஊர்திகளின் எரிபொருளுக்காக மட்டும் மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.69 , டீசல் விலை ரூ.96.76 என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலை ஆகும்.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது நியாயமல்ல. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இனியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இத்தகைய நிலையைத் தவிர்க்க உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு
குறைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x