Published : 30 Mar 2022 11:50 AM
Last Updated : 30 Mar 2022 11:50 AM

பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம்: ஓட்டுநர், பெண் ஊழியருக்கு மனநல பரிசோதனை

உள்படம் உயிரிழந்த சிறுவன் தீட்சித்

சென்னை: சென்னையில் ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்திக்கு மனநல பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனத்துக்கு ஒரு காது கேட்காது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் உடல்நலம் மற்றும் மனநல பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான தடயங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு: விபத்து நடந்த தனியார் பள்ளியில், வளசரவாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது விபத்து ஏற்படுத்திய வேன் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x