Published : 30 Mar 2022 07:04 AM
Last Updated : 30 Mar 2022 07:04 AM

ஸ்டாலின் அமைச்சரவையில் முதல் மாற்றம்: போக்குவரத்துத் துறைக்கு சிவசங்கர் நியமனம்; ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ஏன்?

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும், அத்துறையில் இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைபொதுத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்டஅமைச்சரவை மே.7-ம் தேதிபொறுப்பேற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 10 மாதங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமைச்சரவையில் குறிப்பிட்ட இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து, தேசிய போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சட்டத்துறையானது, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல், பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையானது சிவசங்கருக்கு பதில் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அவர் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்து வந்தது. இந்நிலையில், அவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ஏன்?

ராமநாதபுரம்: போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த திடீர் இலாகா மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதுகுறித்து தகவல்கள் வெளியாகிஉள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் நேற்று முன்தினம்மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:என்னையும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்புக்கண்ணனையும் சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் வீட்டுக்கு அழைத்திருந்தனர். அதன்படி அமைச்சரின் வீட்டுக்குச் சென்றோம்.

அங்கு அமைச்சரைப் பார்த்ததும் வணக்கம் தெரிவித்தேன், பதிலுக்கு அமைச்சர் வணக்கம் தெரிவிக்கவில்லை. “ஏயா நீ ஒரு (எனது சாதியை குறிப்பிட்டு) பிடிஓ, நீஒன்றியத் தலைவர் சொல்வதை மட்டுமே கேட்பாயா? நீ ஒரு (குறிப்பிட்ட சாதி) பிடிஓ என்பதால்உன்னை இங்கு வைத்திருக்கிறேன்” என என்னை அந்த சாதிபிடிஓ என பலமுறை உச்சரித்தார்.மேலும், “முதன்மைச் செயலாளரிடம் சொல்லி மாற்றிவிடுவேன்” என்று கூறினார். பின்னர் உதவியாளரிடம் கூறி இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்றார். மேலும் வெளியே போங்கய்யா என என்னையும், அன்புக்கண்ணனையும் கேவலமாக பேசி அனுப்பினார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது என கூறினார்.

இதையடுத்து அமைச்சர் ராஜ கண்ணப்பனை கண்டித்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அதேநேரத்தில் முதுகுளத்தூர் திமுக ஒன்றியச் செயலாளர்கள் பூபதி மணி, சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகஜோதி ராமர், ராஜலெட்சுமி பூபதிமணிஆகியோர் ஆணையரை அமைச்சர்சாதியைச் சொல்லி அவமானப்படுத்திப் பேசவில்லை, ஆணையர்தான் முறைகேடுகளில் ஈடுபட்டுஉள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சங்கர் லால் குமாவத்திடம் மனு அளித்தனர்.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் சாதிய அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில், சாதி பெயரைச் சொல்லிஅவமானப்படுத்திய ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்தபோக்குவரத்துத் துறை திடீரென மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் முதுகுளத்தூர் சம்பவத்தின் எதிரொலியே என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x