Published : 30 Mar 2022 08:17 AM
Last Updated : 30 Mar 2022 08:17 AM

பள்ளி வேன் விபத்தில் இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவ சபைகள் இடம் தர மறுத்ததாக தாய் வேதனை: வைரலாகும் வீடியோ

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்சித் (7). வளசரவாக்கத்தில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த தீக்சித் நேற்று முன்தினம் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், சிறுவனின் உடலைப் புதைக்க கிறிஸ்தவ சபைகள் இடம் தரவில்லை என அவரது தாயார் ஜெனிபர் கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதுகுறித்து ஜெனிபர் கூறும்போது, “எனது கணவர் இந்து. நான் கிறிஸ்தவர். எனது மகன் இரண்டுமதத்தையும் விரும்பினார். ஆனால், இயேசுவை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், அவனது உடலைப் புதைக்க முடிவெடுத்து, அருகில் உள்ள ஆர்.சி. சபையிடம் அனுமதி கேட்டேன். அதற்கு, `நீங்கள் சி.எஸ்.ஐ. இங்கு சந்தா கட்டாமல், சடலத்தை புதைக்க இடம் கொடுக்க முடியாது' என்றனர்.

இதையடுத்து, சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது ‘நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய, மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால், புதைக்க இடம்தருகிறோம்' என்றனர். மகனின் ஆசையை நிறைவேற்ற கேட்டபோது, கிறிஸ்தவ சபைகள் இடம் தர மறுத்தது வேதனையளிக்கிறது” என்றார்.

இந்நிலையில், வளசரவாக்கம் மாநகராட்சி மயானத்தில் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், விபத்துதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தேவாலய நிர்வாகம் விளக்கம்

இது தொடர்பாக சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் தேவாலய கோயில்பிள்ளை குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமாக சென்னை மாநகராட்சியில் கல்லறைத் தோட்டம் இல்லை. நாங்கள் மாநகராட்சி மயானத்தில்தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகிறோம். மந்தைவெளியில் ஒரு மாநகராட்சி கிறிஸ்தவ கல்லறை தோட்டம் உள்ளது. இதில்,கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களும், இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

சிறுவனின் தாயார் ஜெனிபர், சிஎஸ்ஐ தேவாலயத்தை தொடர்பு கொண்டதாகவும், மதுரையில் சந்தா கட்டுவதால், அங்கிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், எங்களுடைய தேவாலய நிர்வாகத்தை சிறுவனின் குடும்பத்திலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. இன்று (நேற்று) காலை காவல் துறை உயரதிகாரிகள் நேரடியாக வந்து, சிறுவனின் மரணத்தைப்பற்றி விளக்கி, இறுதி ஆராதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

சிறுவன் குடும்பத்தினரின் வலியை உணர்ந்து, எந்த மறுப்பும் சொல்லாமல், போலீஸாரின் வேண்டுகோளுக்கிணங்க இறுதி ஆராதனையை நடத்தினோம்.

ஆனால், சில ஊடகங்களில் எங்களுடைய திருச்சபையை பற்றிஅவதூறான செய்திகள் வெளியாகின. இது வேதனையை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் நேசக்கரம்நீட்டுவதுதான் எங்களுடைய பணி.எனவே, தேவையற்ற அவதூறுகளைப் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறென்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x