Published : 29 Mar 2022 07:06 AM
Last Updated : 29 Mar 2022 07:06 AM

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு | கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்துக்கு மனுத் தாக்கல் செய்ய வந்த சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு அதிகாரி டிஎஸ்பி வினோதினி, இன்ஸ்பெக்டர் சாவித்திரி.

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளநீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனுத் தாக்கல் செய்தனர்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஜுனத்அகமது திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

மேலும், இவ்வழக்கில் கைதான பள்ளி மாணவர்கள் 4 பேரும்ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்குஇல்லத்திலும் அடைக்கப்பட்டுஉள்ளனர்.

சிபிசிஐடி எஸ்பி முத்தரசி மேற்பார்வையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாட்கள் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைதான 8 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளிக்கக் கோரிவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் நேற்று காலை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 29) நடைபெற உள்ளது. அதையொட்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x