பழநி பள்ளிவாசல் மயான பராமரிப்பு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பழநி பள்ளிவாசல் மயான பராமரிப்பு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: பழநி பள்ளிவாசல் மயான பராமரிப்புப் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த முகமது அலி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் 85 ஆண்டுகள் பழமையான முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான மயானத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. இப்பணியைத் தொடங்கியபோது இந்து முன்னணி, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மயான பராமரிப்புப் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. பாஜகவை சேர்ந்த சுவாமிநாதன், கனகராஜ், ஜெகன் ஆகியோர் தங்களையும் இவ்வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க மனு செய்தனர்.

அதில், மயானம் அமைந்துள்ள இடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள, பழநி நகராட்சிக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது.

பள்ளிவாசல் தரப்பில் வருவாய் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மயானம் அமைந்துள்ள இடம் பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மயான பராமரிப்புப் பணியை மேற்கொள்ளலாம். அதற்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in