Published : 28 Mar 2022 05:55 PM
Last Updated : 28 Mar 2022 05:55 PM

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவில், கடந்த 1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளது.

இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். அன்னிய நாட்டை இந்நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மீனவர்கள் கைது குறித்து அனுதாபம் தெரிவிக்க மட்டுமே முடியும். இந்திய அரசு ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கும் யோசனை தெரிவித்தார்.

பின்னர், 68 மீனவர்கள் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x