Published : 27 Apr 2016 01:59 PM
Last Updated : 27 Apr 2016 01:59 PM
தருமபுரி மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், தருமபுரி, பென்னாகரம், மாரண்டஅள்ளி ஆகிய இடங்களில் வேன் பிரச்சாரம் மேற்கொண்டர்.
தருமபுரி பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசியது:
5 ஆண்டுகள் யாரையுமே சந்திக்காமல் ஓய்வில் மட்டுமே இருக்கும் முதல்வர் தமிழகத்திற்கு இனியும் தேவைதானா என மக்கள் முடிவெடுக்க வேண்டும். மதுவிலக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர். எதற்குமே செவிசாய்க்காத முதல்வர் ஜெயலலிதா தற்போது, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக கூறுகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
சொன்னதை எப்போதுமே செய்து முடிக்கும் கருணாநிதி வெற்றி பெற்றால் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து இடுவதாக கூறியுள்ள வாக்குறுதியை நிச்சயம் மக்கள் நம்புவர். ஹெலிகாப்ஃடரில் பறந்து ஏசி மேடையில் பேசி விட்டு செல்லும் ஜெயலலிதாவுக்கு மக்களின் சிரமம் புரியாது. பஸ் கட்டணத்தை உயர்த்திய அதிமுக அரசு பஸ்களின் தரத்தை உயர்த்தவில்லை.
அதிமுக ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி, அதேபோல, பாமக போஸ்டர் ஒட்டும் கட்சி. ஆனால், மக்களின் நலனை பற்றி மட்டுமே யோசிக்கக் கூடிய கட்சி திமுக தான். எனவே திமுக-வை ஆதரியுங்கள்.
இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT