Published : 21 Apr 2016 09:03 AM
Last Updated : 21 Apr 2016 09:03 AM
திமுக தலைவர் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் விமர்சித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்ததை எதிர்த்து அக்கட்சியில் இருந்து சந்திரகுமார் உள்ளிட்டோர் விலகினர். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி கருத்து தெரிவித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவினர் பல இடங்களில் வைகோ உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களும் வைகோ கருத்தை கண்டித்தனர். இதையடுத்து, அன்று இரவே கடிதம் மூலம் கருணாநிதியிடம் வைகோ மன்னிப்பு கோரினார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. ஒரு கட்சியினர், மாற்றுக்கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம், கருணாநிதி மீதான விமர்சனம் குறித்து விளக்கம் கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரி கடந்த 11-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ள ஆணையம், 20-ம் தேதி (நேற்று) மாலை 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருந்தது. விளக்கம் அளிக்காவிட்டால், தொடர் விளக்கம் கோராமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்ட போது, ‘‘இன்று (நேற்று) பகல் 1 மணி வரை விளக்க கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை’’ என்றார். மதிமுக தரப்பில் விசாரித்தபோது, நேற்று பிற்பகல் 2 மணி அள வில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT