பாரத் பந்த்: உதகையில் பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி

பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் உதகை பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் |  படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்.
பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் உதகை பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் | படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்.
Updated on
1 min read

உதகை: மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. அரசு பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதியடைந்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும் (மார்ச் 28) நாளையும் (மார்ச்:29) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்பட வில்லை. பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தையொட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்படுவதால் ஆட்டோக்கள் மற்றும் மினி பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஏறும் பயணிகள்.
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஏறும் பயணிகள்.

உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை ஒரே ஒரு பேருந்து ஈரோட்டிலிருந்து உதகை வந்தது. அந்த பேருந்து பின்னர் கூடலூர் புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து ஓட்டுனருக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்காலிக ஊழியர்கள் மற்றும் சில ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால், அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in