Published : 27 Mar 2022 05:09 AM
Last Updated : 27 Mar 2022 05:09 AM

வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணைத் தலைவராக அதிமுக கவுன்சிலர்கள் தேர்வு

கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.

கோவை

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 இடங்களை கைப்பற்றியது. திமுக 6 இடங்களையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் கைப்பற்றினர். வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், அன்று திமுக, அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதிமுக சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தலை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் தேர்தலை நடத்தினார். கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ சிறப்புப்பார்வையாளராக இருந்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். கவுன்சிலர்கள், தேர்தல்அலுவலர்கள் மட்டும் பேரூராட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்புறமுள்ள சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன. இதற்குஅருகே திமுகவினரும், மற்றொருபுறம் அதிமுகவினரும் திரண்டிருந்தனர். நேற்று காலை முதலில் வந்த அதிமுக கவுன்சிலர்களை போலீஸார் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர், திமுக கவுன்சிலர்கள் வந்தனர். அவர்களுடன் திமுகவினர் உள்ளேநுழைய முயன்றனர். அவர்களைபோலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஆனால், அதையும் மீறி திமுகவினர் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துமீறிய திமுகவினரை கலைக்க, போலீஸார் லேசானதடியடி நடத்தினர். அப்போது பெண் கவுன்சிலருடைய கணவரின் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் போலீஸாரை கண்டித்து, திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவினர், அதிமுகவினர் மாறி மாறி கோஷமிட்டனர். அதிமுக கவுன்சிலர் மருதாச்சலத்தின் கார் மீது சிலர் கல் வீசி தாக்கினர். அங்கிருந்தவர்களையும் தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.

இதற்கு இடையே வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு அதிமுக கவுன்சிலர் மருதாச்சலம் போட்டியிட்டார். திமுக கவுன்சிலர்கள் ஓட்டுச் சீட்டை வாங்கி கிழித்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருதாச்சலம் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் கணேசனும் வெற்றி பெற்றாா். திமுக கவுன்சிலர்கள் தேர்தலின்போது நடந்த சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x