Last Updated : 26 Mar, 2022 05:55 PM

 

Published : 26 Mar 2022 05:55 PM
Last Updated : 26 Mar 2022 05:55 PM

மது குடிப்போரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட மதுக்கடை உரிமையாளர் - அகற்றும் நடவடிக்கையில் புதுச்சேரி காவல்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் மது அருந்துவோரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட மதுக்கடை உரிமையாளருக்கு கலால் துறை உத்தரவுப்படி போலீஸார் எச்சரிக்கை விடுத்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் தமிழகத்தின் எல்லையையொட்டி செட்டிப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மதுக்கடை அமைந்துள்ளது. புதுவையில் மதுபான விலை குறைவு என்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளான திருவக்கரை, எறையூர், நெமிலி, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிக எண்ணிக்கையில் மது குடிப்போர், சங்கராபரணி ஆற்றைக் கடந்து, செட்டிப்பட்டு மதுக்கடைக்கு வந்து, குடித்து விட்டு செல்வது வழக்கம்.

தற்போது சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் தமிழகப் பகுதியை சேர்ந்த மதுகுடிப்போர் சங்கராபரணி ஆற்றைக் கடந்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், விற்பனை பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மதுக்கடை உரிமையாளர் தனது சொந்த செலவில் மிதவை அமைத்துள்ளார்.

சங்கரா பரணி ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் தொலைவுக்கு கரைகளின் இருபுறம் கயிறு கட்டி, அதன் மூலம் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மதுக்குடிப்போரை செட்டிப்பட்டு மதுக்கடைக்கு மிதவையில் அழைத்து வருகின்றார். அவர்கள் மது குடித்ததும் பின், அதே மிதவையில் திருப்பி அனுப்புகின்றனர்.

மது அருந்திவிட்டு செல்வோர் ஆற்றில் விழுந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிந்து, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவுப்படி தாசில்தார் சிலம்பரசன், போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு உரிமையாளரை கண்டித்தனர். மிதவையை அகற்றவும், இதுபோல் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x