தமிழகத்தில் சொத்து வரி திருத்தப்படாததால் 5 ஆண்டுகளில் ரூ.2,598 கோடி வருவாய் இழப்பு: இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் சொத்து வரி திருத்தப்படாததால் 5 ஆண்டுகளில் ரூ.2,598 கோடி வருவாய் இழப்பு: இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சொத்து வரி திருத்தப்படாததால் 2013 முதல் 2018 வரையிலான 5 ஆண்டு காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.2,598 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி திருத்தப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.

கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான இந்திய கணக்கு,தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (மாநகராட்சிகள், நகராட்சிகள்,பேரூராட்சிகள்) முக்கிய நிதிஆதாரமாக இருப்பது சொத்து வரி. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி திருத்தியமைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 2013 முதல்சொத்து வரி திருத்தம் செய்யப்படவில்லை. இதனால், கடந்த 2013முதல் 2018 வரையிலான 5 ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.2,598 கோடி வருவாய் இழப்புஏற்பட்டது. 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொது திருத்தம் திரும்பப் பெறப்பட்டதாலும்2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களே இன்று வரை தொடர்வதாலும் நகர்ப்புற உள்ளாட்சிகள் ரூ.678 கோடி கூடுதல்வருவாயை இழந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டது. இது அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.

சொத்து வரி திருத்தம் அவ்வப்போது நடந்திருந்தால் 2018 திருத்தத்தின்போது பொது மக்களால் உணரப்பட்ட சொத்துவரி திடீர் உயர்வின் தாக்கம், திருத்தத்தை அரசு நிறுத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழ்நாடு மாநில சொத்து வாரியம் 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த வாரியம்தன் செயல்பாடுகளை தொடங்கவில்லை. இதன் காரணமாக 2018சொத்து வரி பொது திருத்தத்தின்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை.

வரி வருவாயை பெருக்க பின்வரும் பரிந்துரைகளை அரசு கருத்தில் கொள்ளலாம்.

# 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைசொத்து வரி திருத்தியமைக்கப்படுவதை கட்டாயம் ஆக்கலாம்.

# அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் புவியியல் தகவல் அமைப்பு (ஜியோ இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) மேப்பிங் முடிந்து, விடுபட்ட சொத்துகளை மதிப்பீட்டுக்கு கொண்டுவரலாம்.

# பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் இருப்பதுபோல அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஆன்லைனில் சொத்து வரிசெலுத்தும் முறையை செயல்படுத்தலாம்.

# மறு அளவிடப்பட்ட மற்றும்மறுவகைப்படுத்தப்பட்ட சொத்துகள் மீது சொத்து வரி வசூலிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in