Published : 03 Jun 2014 05:16 PM
Last Updated : 03 Jun 2014 05:16 PM

முல்லைப் பெரியாறு: மேற்பார்வை குழு அமைக்க பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த, மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

சுமார் 50 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, மனு ஒன்றையும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சுமார் 50 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தமிழகத்திற்கு மிகவும் உதவிபுரிவதாகவும், நலன்புரிவதாகவும் அமையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவரிக்கப்பட்ட மனுவை பிரதமரிடம் தந்துள்ளேன். முக்கியமாக, அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குழுவிற்கு மத்திய நீர் மேலாண்மை ஆணையம் சார்பாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

நதிநீர்ப் பிரச்சினைகள்

சமீபத்தில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அணையின் அளவை உயர்த்தப்படுவதை மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழு கண்காணிக்க வேண்டும். அதில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசு சார்பாக தலா ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். கண்காணிப்பை மேற்கொள்ள தமிழக அரசு சார்பாகவும் கேரள அரசு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய அதிகாரியை உடனடியாக அவசர காலத்தில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். தென்கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், விவசாயிகள் பயனடைவர் என்பதை அவரிடம் விவரித்தேன். பிரதமர் இதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அமைக்க வேண்டுன் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன். அதன்பிறகு, அந்த வாரியத்தால் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் காவிரி நதிநீர் தீர்ப்பாணையத்தின் இறுதி உத்தரவை நடைமுறைப்படுத்த முடியும்.

தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு

நான் தமிழகத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கவில்லை. மாறாக, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தாலும் அதற்காக நிதி ஒதுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்புகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உதாரணமாக, மத்திய அரசின் விற்பனை வரி 4%-ல் இருந்து 3% ஆகவும், பிறகு 3-ல் இருந்து 2% ஆகவும் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. எனவேதான் நான் அதற்கு ஒப்புதல் அளித்தேன். மத்திய அரசின் விற்பனை வரி மேலும் குறைக்கப்பட்டாலும், மத்திய அரசால் தமிழகத்திற்கு தர வேண்டிய, சுமார் ரூ.7,000 கோடி நிலுவையில் உள்ளது.

மேலும், பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் சுமார் ரூ.4,000 கோடி மத்திய அரசால் மாநிலத்திற்கு தர வேண்டியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை நிரைவேற்ற இதுவரை மாநிலத்தின் நிதியில் இருந்துதான் செலவிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் தமிழகத்திற்கு அளிக்கப்படவில்லை. இந்தச் செலவு தமிழகத்தின் நிதி நிலையை மோசமான அளவில் பாதித்துள்ளது. எனவே, நான் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு உடனடியாக இந்த நிதியை தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மின் பிரச்சினை:

மின் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய நிலைகளில் இருந்து தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய 15 சதவீத மின்சாரம் இன்னும் ஒதுக்கப்படாமலேயே உள்ளது. இந்த 15 சதவீத மின்சாரத்தை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும அவரிடம் பேசினேன். மேலும், தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான முழுமையான மனுவை பிரதமரிடம் அளித்துள்ளேன். ஒரு மாநிலத்தில் 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அவர், தமிழகத்தின் தேவைகளை பொறுமையாக கேட்டறிந்தார். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்" என்றார் முதல்வர் ஜெயலலிதா

முன்னதாக, முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x