

சென்னை: விருதுநகர் பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக தமிழக பாஜக போராட்டம் நடத்துவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: விருதுநகரில் 22 வயது பெண்பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும் தவறு செய்வோருக்குப் பாடமாக இருக்கும் வகையில் தண்டனையைப் பெற்றுத் தருவோம்என்று சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், தற்போது விருதுநகர் இளம் பெண் கூட்டுப் பலாத்கார வழக்கில் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று விருதுநகரிலும், சென்னையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர் கையில் எடுத்த எந்த பிரச்சினையும் தமிழகத்தில் எடுபடவில்லை என்பதால், தற்போது அவதூறுகளைப் பரப்பி வருகிறார். இதிலும் அவர் தோல்வி அடைவார். முன்னதாக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கடந்தஆண்டு கருத்து கூறியிருந்தார்.
அதுகுறித்து தமிழக பாஜக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முதலில் தெளிவு படுத்தவேண்டும். விருதுநகர் விவகாரம் குறித்து போராட்டம் நடத்தத்தமிழக பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. அண்ணாமலையின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.