Last Updated : 25 Mar, 2022 03:21 PM

 

Published : 25 Mar 2022 03:21 PM
Last Updated : 25 Mar 2022 03:21 PM

புதுவை முழு அடைப்பு போராட்டத்துக்கு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு

புதுவையில், மார்ச்.29 அன்று முழுஅடைப்புப் போராட்டம் குறித்து முடிவெடுக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில் நடந்த மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம்.

புதுச்சேரி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 29-ம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து 28, 29ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 28ம் தேதி வேலைநிறுத்தம், 29ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கத்தினர் பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில் நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, இந்தியக் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலர் ராஜாங்கம், பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன், மதிமுக கபிரியேல், முஸ்லீம் லீக் உமர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்துக்கு பின்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 28ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம், 29ம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது என்று அறிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், "புதுச்சேரி மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. முக்கியமாக மக்களின் கோரிக்கைகள், நலத்திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. பாஜக கொள்கைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மாநில ஆட்சி நடக்கிறது. அதற்காகவும்தான் பந்த் நடத்துகிறோம்" என்றார்.

விடுப்பு எடுக்கத் தடை: வேலைநிறுத்தம், பந்த் போராட்டம் நடைபெறும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு தகுந்த காரணமின்றி விடுமுறை அளிக்கக்கூடாது என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தலைமை செயலகத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சரியான காரணமின்றி விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்றும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பகல் 12 மணிக்குள் துறைகளில் அரசு ஊழியர்களின் வருகை குறித்து அந்தந்த துறை தலைவர்கள் தலைமைச் செயலகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x