

விருதுநகர்: விருதுநகரில் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று காலை விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைதான நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இன்று (மார்ச் 25) காலை விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் எஸ்.பி. முத்தரசி, டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் நேரில் சென்று மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இதற்கிடையே தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸார் விருதுநகருக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காப்பகத்தில் சென்று சிபிசிஐடி போலீஸார் இன்று காலை விசாரணை நடத்தினர்.
மேலும் கைதான நபர்களின் வீடுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடங்களுக்குச் சென்று தடயங்கள் மற்றும் அங்கு உள்ள பிற ஆவணங்களை சேகரிக்கவும் தடயங்களை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியோடு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை யார் யாருக்கு எப்போது பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் இதில் தொடர்புள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.