Published : 25 Mar 2022 08:18 AM
Last Updated : 25 Mar 2022 08:18 AM

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில்கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், மணல் உள்ளிட்ட கனிமவளங்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவி்ட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் சட்டவிரோதமாக மணல்உள்ளிட்ட கனிம வளப் பொருட்களை கடத்தியதாக அவர்களின் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்க நாகப்பட்டினம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில், தங்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது என்றும், தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர்லாரிகள், பொக்லைன்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மழை, வெயில் காரணமாக வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். எனவே அந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி சட்டவிரோதமாக கனிமவளங்களை கடத்தியதால்தான் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை விடுவித்தால் மீண்டும் அதேசட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவர். தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்றார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘இதுபோன்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். அதற்கு வாகன உரிமையாளர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இழுத்தடிப்பு செய்யக் கூடாது. நமது தாய் மண்ணை எந்தவொரு சேதாரமும் இல்லாமல் நமது முன்னோர் நமக்கு வழங்கியுள்ளனர்.

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் எந்த காரணம் கொண்டும் கனிமவளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. தற்போதுள்ள இயற்கைவளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கட்டாயம் தேவைப்படும். பூமி மீது ஏற்படுத்தப்படும் பாதிப்பைகண்ணை மூடி வேடிக்கை பார்க்கக்கூடாது. சுத்தமாக ஓடிய ஆறுகள்கழிவுநீர் கால் வாயாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x