

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வரும் பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட செனடாப் சாலையில் ரூ.2 கோடியே14 லட்சம் மதிப்பீட்டில் 870 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சி.வி.ராமன் சாலையில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் ரூ.4 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சி.வி. ராமன் சாலை முதல் டிடிகே சாலை வரை நடந்தே சென்று அப்பகுதியில் நடைபெற்று வரும்மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் ஷீபா வாசு, கி.மதிவாணன், மோ.சரஸ்வதி உடனிருந்தனர்.