Published : 08 Apr 2016 12:55 PM
Last Updated : 08 Apr 2016 12:55 PM
பாஜக கூட்டணியில் தமாகா இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது:
"தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமாகாவுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.
தமாகாவுக்குள் நடக்கும் உட்கட்சி பிரச்சினைகள் தெரியாது. அதனால் அவர்கள் முடிவு என்ன என்று இப்போது தெரியவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைப்பதை விட பாஜகவுடன் கூட்டணி வைப்பதே சரியானதாக இருக்கும். ஊழலுக்கு எதிரான கட்சிகள் பாஜகவுடன் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் சிலரை அழைப்பது பலவீனமானவர்கள் என்பதற்காக அல்ல. பலத்தைக் கூட்டுவதற்குதான்.
வாசனை வரவேற்கிறோம். உதிரியாக இருந்தால் சாதிக்க முடியாது. உறுதியாக இருந்தால் சாதிக்கலாம்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT