Last Updated : 23 Mar, 2022 04:11 PM

 

Published : 23 Mar 2022 04:11 PM
Last Updated : 23 Mar 2022 04:11 PM

உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் பெறும்: கிழக்கு கடற்படை தளபதி தகவல்

ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தில் புதிதாக இணைக்கப்பட்ட ஏஎல்ஹெச் எம்கே 3 வகை ஹெலிகாப்டர்களை வானிலிருந்து இறங்கியபோது தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்: இன்னும் 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் நாட்டின் தெற்குப்பகுதியில் அனைத்து விமானங்களையும் இயக்கும் வகையில் பெரிய விமானத்தளமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இரண்டு மேம்பட்ட இலகு ரக எம்கே 3 வகை ஹெலிகாப்டர்கள் இணைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திர தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தலைமை வகித்தார். விழாவிற்கு ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தின் கமாண்டிங் ஆபீஸர் கேப்டன் விக்ராந்த் எஸ்.சப்னீஷ் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் மற்றும் கடற்படை அலுவலர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா பேசியது: "மேம்பட்ட இலக ரக எம்கே 3 (ஏஎல்ஹெச் எம் 3 ) வகை ஹெலிகாப்டர் முற்றிலுமாக இந்திய தயாரிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கால் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை கிழக்கு பிராந்தியத்தின் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இணைப்பதில் பெருமை கொள்கின்றேன். இந்த ஹெலிகாப்டர்கள் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு, பாதுகாப்பு, மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும்.

மேலும், இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்களுக்கு மருந்துப் பொருட்கள், உதவிப் பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படும். இயற்கை சீற்றங்களின்போது மத்திய, மாநில அரசுகளின் உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் கப்பல்களில் இருந்தும், விமானங்களில் இருந்தும் இயக்கலாம். இந்திய கடற்படை கரோனா காலத்தில் நாடு முழுவதும் மற்றும் உலக நாடுகளுக்கும் மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டது.

ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தில் புதிதாக இணைக்கப்பட்ட ஏஎல்ஹெச் எம்கே 3 வகை ஹெலிகாப்டர்களை வானிலிருந்து இறங்கியபோது தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பமாக ரேடார், சென்சார்ஸ், நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியுள்ளது இவ்வகை ஹெலிகாப்டர்கள். ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் கடற்பகுதிகளில் மற்ற பாதுகாப்பு துறைகளுடன் இணைந்து மீனவர்கள் எல்லை தாண்டுவது, போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடற்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு துறைகள் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

கடற்பாதுகாப்பில் மீன்வளத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், சுங்கத்துறை, இந்திய கடலோர காவல்படையினர் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இந்திய கடற்படை கடற்பகுதியில் அண்டைநாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் தற்போதுள்ளதைவிட ஐந்து மடங்கு பெரிதாகி குறிப்பாக 8000 அடி ஓடுபாதையுடன் கூடிய இந்தியாவின் தெற்கு பகுதியில் பெரிய கடற்படை விமான தளமாக மாறும். அப்போது இங்கு ராணுவத்தின் சிறிய, பெரிய போர் விமானங்கள், சிவில் விமானங்களை இயக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.

முன்னதாக, வானிலிருந்து ஓடுபாதையில் இறங்கி வந்த 2 புதிய ஹெலிகாப்டர்களுக்கும், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த கடற்படை விமானத்தளம் சிறந்து விளங்குவதாக பாராட்டி, அதன் கமாண்டிங் ஆபீஸர் விக்ராந்த் எஸ். சப்னீஸிடம், கிழக்கு பிராந்திய தளபதி ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x