Published : 23 Mar 2022 06:05 AM
Last Updated : 23 Mar 2022 06:05 AM

பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 7-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 15-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் கோயில் முன்பாக எரியூட்டப்பட்டு, 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் நேற்று முன்தினம் இரவு குண்டம் தயாரானது. தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 4 மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, பூசாரி செந்தில்குமார் முதலில் குண்டம் இறங்கினார்.

அவரைத் தொடர்ந்து ஏற்கெனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தின் இரு பகுதிகளிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு, பக்தர்கள் முறையாக குண்டமிறங்க உதவினர்.

சீருடை போலீஸாருக்கு கட்டுப்பாடு

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் உள்ளிட்ட காவல்துறையினர், ஆண்டுதோறும் சீருடையுடன் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சீருடையுடன் காவல்துறையினர் குண்டம் இறங்கக் கூடாது என ஈரோடு எஸ்பி சசிமோகன், வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இதனால், காவல்துறையினர் பலர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவல் தெரியாத சிலர் சீருடையுடன் குண்டம் இறங்கிய நிகழ்வும் நடந்தது.

ஆண்டுதோறும் பண்ணாரியில் குண்டம் இறங்கும், ஐஏஎஸ் அதிகாரி அமுதா (ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர்) இந்த ஆண்டும் குண்டம் இறங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டதால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருநங்கைகள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய நிலையில், அதன்பின்னர், கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டது.

குண்டம் விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் தங்கக் கவசம் அணிந்து வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் உற்ஸவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x