

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் நேற்று கூறியதாவது: இந்த ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ1,320 கோடி நிதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். அதேபோல் மகளிர் இலவச பயண திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.1520 கோடி நிதி ஒதுக்கியதையும் வரவேற்கிறோம். 2,213 நவீன டீசல் பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படுவது வரவேற்கக் கூடியது.
கூடுதலாக இன்னும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். போக்குவரத்து கழகங்கள் தற்போது சுமார் ரூ.50 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தைப்போல அரசு போக்குவரத்து கழக கடன் மற்றும் செலவினங்கள் தொகை முழுவதையும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர்கள் என எதிர்பார்த்திருந்த அரசே பென்சனை ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பும், அகவிலைப்படி 76 மாத கால உயர்வு நிலுவையில் உள்ளதை அறிவித்து ஓய்வூதியத்துடன் இணைப்பது, நிலுவைத் தொகை வழங்குவது, 14-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.