மோட்டார் வாகன தீர்ப்பாயங்களில் உள்ள ரூ.3,524 கோடி நிரந்தர வைப்பீட்டை உரியவர்களுக்கு வழங்க உத்தரவு

மோட்டார் வாகன தீர்ப்பாயங்களில் உள்ள ரூ.3,524 கோடி நிரந்தர வைப்பீட்டை உரியவர்களுக்கு வழங்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் நிரந்தரவைப்பீடாக உள்ள ரூ.3,524கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்டிருந்த ரூ. ஒரு கோடியே 51 லட்சத்தை நீதிமன்ற ஊழியர் கையாடல செய்த விவகாரத்தையடுத்து, இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

அதன்படி 3 குழுக்களை அமைத்து, தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆய்வு நடத்தி குழுக்கள் அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி தமிழகம் முழுவதும் 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் கடந்த ஜனவரி வரை ரூ.3,524 கோடி நிரந்தர வைப்பீடு உள்ளது என்றும், உரிமை கோரப்படாத இழப்பீடுகளின் வட்டிமட்டுமே ரூ.40 கோடி வரை சேர்ந்துஉள்ளது என்றும், எனவே உரியபட்டியல் தயாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இழப்பீட்டுத்தொகையை விரைந்து வழங்க தீர்ப்பாயங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்குப் பதிலாக, மாவட்டநுகர்வோர் குறைதீர் ஆணையம் போல, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் தனி தீர்ப்பாயங்களை அமைக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மோட்டார் வாகன விபத்துவழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு என மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களை அமைப்பதன் மூலம், உயர் நீதிமன்றம், தனது அரசியல் சாசன விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். விபத்து இழப்பீடுகள் பல ஆண்டுகளாக முறையாக வழங்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உரியவர்களை அடையாளம் கண்டு இந்த தொகைகளை வழங்கவேண்டும் அல்லது தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதியையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் வாகன விபத்து இழப்பீடுகளை டெபாசிட் செய்வதற்காக தனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும், என பல்வேறு வழிகாட்டுஉத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்.1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in