

பிரான்ஸ் நாட்டின் வசந்தகால திருவிழாவையொட்டி புதுச்சே ரியில் நடைபெற்ற பாய்மரப் படகு அணிவகுப்பை பிரான்ஸ் துணைத்தூதர் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவையொட்டி புதுச்சேரி பாய்மரப்படகு சங்கத்தின் சார்பில், பாய்மரப் படகுகளின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. புதுச்சேரி காந்தி திடல் பின்புறம் உள்ள கடலில் நடத்தப்பட்ட இந்த பாய்மரப்படகு அணிவகுப்பில் 9 வயது முதல் 60 வயது வரை உள்ள பயிற்சி பெற்ற நபர்கள் 10 படகுகளில் பங்கேற்றனர்.
இந்த பாய்மரப்படகு அணி வகுப்பை புதுச்சேரி பிரஞ்சு துணை தூதர் லிஸ் டால்போர்ட் பரே மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பாய்மரப்படகுகள் கடலில் அணிவகுத்து வலம் வந்ததை கடற்கரையில் குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பாய்மரப்படகு அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.