Published : 19 Mar 2022 02:22 PM
Last Updated : 19 Mar 2022 02:22 PM

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: டிஜிட்டல் வேளாண்மை திட்டம் அறிமுகம்

சென்னை: "முதல்வரின் மின்னணு தகவல் பலகை" (CM Dash Board)-ன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, வேளாண் துறையிலும் மின்னணு வேளாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து மின்னணு வேளாண்மைத் திட்டம் (Digital Agriculture) குறித்து கூறியது: தமிழக முதல்வர் அனைத்து திட்ட முன்னேற்றங்களை நிகழ்நிலையில் தெரிந்து கொள்வதற்காக, "முதல்வரின் மின்னணு தகவல் பலகை" (CM Dash Board) ஒன்றை வடிவமைத்துக் கண்காணித்து வருகிறார்கள். அதேபோன்று இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, வேளாண் துறையும் மின்னணு வேளாண்மைத் திட்டத்தினை வடிவமைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

> விதை முதல் விளைச்சல் வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் உழவன் செயலி மூலம் பெறலாம். விளைநிலங்கள் வாரியாக விதைப்பு முதல் விற்பனை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவித்து, அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.

> விளைநிலங்கள் வாரியாக பயிர்த்திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக்குறியீடு (Geo Tagging) வழங்கப்படும். தொடர்ந்து, உடைமைதாரர்களின் அடிப்படை விவரங்கள், மண்வளம், சாகுபடி விவரங்கள் இணைக்கப்படும். தமிழகத்தின் ஏழு வேளாண் மண்டலங்கள், 1330 குறு வேளாண் மண்டலங்களாக பகுக்கப்பட்டு, உற்பத்திக் காரணிகளின் அடிப்படையில் புதிய சாகுபடித்திட்டம் படிப்படியாக பரிந்துரைக்கப்படும்.

> தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூச்சி மற்றும் நோய்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் கண்காணிக்கப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்படும்.

> தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

> தானியங்கி முறையில் நீர்ப்பாசனம், நீர்வழி உரமிடல் ஆகிய நவீன தொழில்நுட்ப பயிற்சியினை விவசாயிகளுக்கு அளிப்பதற்காக, வேளாண்மை, தோட்டக்கலை அரசுப்பண்ணைகளில் உரிய அமைப்புகள் நிறுவப்படும்.

> “உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால் வயலிலே வளம் காண முடியாது” என்றார் அண்ணா. அவரின் எண்ணத்திற்கு வண்ணம் தரும் வகையில் உழவனின் உள்ளத்தில் உள்ள ஏக்கத்தினை போக்கும் நோக்கோடு "தமிழ் மண் வளம்" என்ற தனி இணைய முகப்பு (Portal) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். இதனால், விவசாயிகளின் நிலங்களின் புல எண் வாரியாக மண் வளத்தினைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மண் வளப் பரிந்துரை அட்டையினையும் தாங்களே அச்சிட்டு கொள்ள முடியும் இதன் மூலம் மண் வளத்திற்கேற்ற, வேளாண், தோட்டக்கலை, மரப்பயிர்கள் பரிந்துரை செய்யப்படும்.

> "தொலையுணர்தல்" (Remote Sensing) தொழில்நுட்பம் மூலம் நிலஉடைமை ,பருவம் வாரியாக பயிர்களின் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் விலை கணிக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன் மூலம் விளை பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும்.

> திட்ட செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை: வேளாண்மை, உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ், பயனாளிகளை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்திட, அனைத்து திட்டங்களிலும் படிப்படியாக கணினியில் பயனாளிகளைப் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும்.

> விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக்கன்றுகள், பழமரச்செடிகள், தென்னை மரக்கன்றுகளை கணினியில் முன்கூட்டியே பதிவு செய்து காலத்தே சாகுபடி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

> விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவர் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக திறன் ரீதியாக புதிய செயலியில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். இதன் மூலம் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள் மூலம் போதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, விவசாயப் பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ளவும் இச்செயலி பயன்படும்.

> வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை: விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களைப் பெறும்போது, தங்கள் பங்களிப்புத் தொகையினை இ-சலான், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை (UPI) மூலம் செலுத்த வழிவகை செய்யப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் செயல்படுத்தப்படும்.

மேற்கூறிய புதிய மின்னணு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இத்திட்டம் எட்டு கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x