Published : 19 Mar 2022 10:14 AM
Last Updated : 19 Mar 2022 10:14 AM

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சென்னை: 2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக காலை 10 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடைய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: 2022-23 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

* மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்கள் சாகுபடியை 4250 ஏக்கரில் மேற்கொள்ள, 5 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பனை வெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* சிறந்த பனை ஏறும் இயந்திரங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.

* அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சுவைதாளிதப் பயிர்களுக்கான (ஸ்பைசஸ் அண்ட் காண்டிமன்ட்ஸ்) மரபணு வங்கி.

* விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

* * 5000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியம் வரை மொத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு.

* முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில் 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் 65 கோடியே 34 லட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

* வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்களையும், கருவிகளையும் பழுதுபார்த்திட ஏதுவாக மூன்று நடமாடும் பழுது நீக்கும் வாகனங்கள் அமைக்கவும் ரூ3 கோடியே 54 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு.

* தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் “சி”, “டி” வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், இரண்டு இலட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.5 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்க ரூ. 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி வழங்கப்படும்.

* 40. அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சுவைதாளிதப் பயிர்களுக்கான (Spices and Condiments) மரபணு வங்கி தொடங்கப்படும்.

* பழப்பயிர்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் இவ்வாண்டு "பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்" செயல்படுத்தப்படும். நடவுச்செடிகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கி இத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.

* தரமான மா, கொய்யா, சப்போட்டா, நாவல், பலா, இலந்தை, மாதுளை போன்ற நடவுச்செடிகளுக்கு முன் பதிவு செய்வது முதல் இடுபொருட்கள் விநியோகம், தரம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தல் வரை அனைத்து செயல்பாடுகளும் இணையவழியில் மேற்கொள்ளப்படும். இத்திட்டம், 20 கோடியே 21 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

* எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டில், 10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்.

* வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

* மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் செயல்படுத்தப்படும்.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநில அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம் அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்.

* தமிழகம் முழுவதும் அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைக்கப்படும். மாணவர்கள் இதன் மூலம் விவசாயம், ஊட்டச்சத்து பற்றி அறிவர்.

* ரூ.8 கோடியில் டிவ்ஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

* மஞ்சள், இஞ்சி இடுபொருட்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.

* கருப்பட்டி உட்பட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.

* தமிழகம் முழுவதும் 38 கிராமங்களில் ரூ.95 கோடி செலவில் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையம் அமைக்கப்படும்.

* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையானது டன்னுக்கு ரூ.195 உயர்த்தித் தரப்படும்.

* சர்க்கரை ஆலை நவீனமயமாக்கல் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உழவர் சந்தைகளில் காய் கனி வரத்தை அதிகரிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.

* பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.

* மானாவரி நில மேம்பாட்டுக்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பூண்டு சாகுபடியை அதிகரிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

* கரும்பு சாகுபடிக்கு உதவித் தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேனி வளர்ப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* விவசாயிகள் இருபொருட்களை எடுத்துச் செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்.

* காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

* அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மழையிலிருந்து விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கப்படும்.

* தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சோயா சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்காக சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு,

* மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயணாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவியாக ரூ.20 கோடி ஒதுக்கீடு,

* தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி ஒதுக்கீடு.

* காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

* பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ்ம் செங்குத்து தோட்டம் (வெர்டிகல் கார்டன்) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி ஒதுக்கீடு.

* பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* மாநிலம் முழுவதும் 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.

* சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும்.

* கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வேளாண் துறையில், விதை முதல் விற்பனை வரை தெர்ந்துகொள்ளும் வகையில் 'செயலி' (app) உருவாக்கப்படும்.

* உரப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க 7 விவசாய பயிற்சி மையங்கள் அமைப்படும்.

* விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்.

* மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அறிவிக்கப்படும்.

* வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.

* எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சூரியகாந்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும்.

* கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும்.

* மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

* மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* நெல் ஜெயராமன் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ.2055 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* 7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

* 2021 - 22ல் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

* திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

* சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களைத் தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம் .

* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் புத்தொழில் நிறுவனங்களில் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு ரூ.10 லட்சம் ரூபாய வரை நிதியுதவி வழங்கப்படும்.

* வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவது கண்காணிக்கப்படும்.

* வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக 33,007.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கக் கூடிய மாற்றுப்பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 6 திட்டங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அவையும் நீண்ட கால திட்டங்கள் என்பதால் இன்னும் முழுமை பெறவில்லை. 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது.

* தமிழகத்தில் விவசாயத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் அறிவிப்புகள் உதவியாக இருக்கும்.

* விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x