Published : 13 Jun 2014 05:00 PM
Last Updated : 13 Jun 2014 05:00 PM

101 தீயணைப்புத் துறைக்கு உதவும் 108 ஆம்புலன்ஸ்!

108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை வந்தபிறகு அது தீயணைப்புத் துறையினருக்கு பாலமாகச் செயல்படுகிறது. இதன்மூலம் விபத்து மற்றும் பேரிடர் தகவல்கள் உடனுக்குடன் வந்து, உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ள இது ஏதுவாகிறது என்று தெரிவிக்கின்றனர் தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணிகள் துறையினர்.

கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆரம்பகாலத்தில் கோவை மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட பல மாவட்டங்களை உள்ளடக்கி இயங்கி வந்தது. ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு அந்த மாவட்டத்தை தலைமையாக கொண்டு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, அதற்குரிய எல்லைகளும் நிலையங்களும் பிரிக்கப்பட்டன.

அதேபோல் திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் அதற்குரிய எல்லைகள் வகுக்கப்பட்டு, அவற்றுக்குரிய நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து கோவையை மையமாக வைத்தே நீலகிரி மாவட்டத்திற்குரிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையங்களும் இயங்கி வந்தன.

புதன்கிழமை முதல் நீலகிரியை மையமாக வைத்து புதிய தலைமை அலுவலகம் ஊட்டியில் ஏற்படுத்தப்பட்டு காணொலி காட்சி மூலம் முதல்வர் அதை திறந்து வைத்தார்.

கோவை, நீலகிரி மாவட்டங்கள் இணைந்திருந்த வேளையில் 303 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றிவந்தனர். அவர்களில் 102 பேர் நீலகிரி மாவட்ட தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். தற்போது கோவை மாவட்டத்தில் 201 வீரர்கள் மட்டும் உள்ளனர். அதேபோல் கோவை மாவட்டத்தில் முன்பு 11 என்ற எண்ணிக்கையில் இருந்த தீயணைப்புத் துறை நிலையங்கள் தற்போது கோவை வடக்கு, கோவை தெற்கு, கணபதி, பீளமேடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என ஏழு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களாக (fire & rescue station) எண்ணிக்கை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்குள் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் உள்ள ஸ்டேஷன்கள் அடங்கிவிட்டன. இதற்கேற்ப தீயணைப்பு வீரர்கள், வாகன டிரைவர்கள், தீயணைப்பு தண்ணீர் லாரி போன்றவை பிரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிர்வாக ரீதியான பணிப்பளு குறையும் என்றாலும் நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பேரிடர்களும், நிலச் சரிவுகளும் ஏராளமாக நடப்பதால் இங்கிருந்து வாகனங்களும், வீரர்களும் சென்றால்தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர் தீயணைப்புத்துறை ஊழியர்கள்.

கோவை மாவட்டத்தில் தற்போதுள்ள தீயணைப்பு நிலையங்களில் 34 டிரைவர்கள் தேவை. அவர்களில் 17 பேரே பணியாற்றுகின்றனர். 17 பேருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. தீயணைப்பு வீரர்கள் 121 பேர் தேவை. அவர்களில் 60 பேரே பணியில் உள்ளனர். மீதி 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை அலுவலகங்களில் 1050 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மற்றபடி தீத்தடுப்பு உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் லாரிகள் தேவையான அளவுக்கு உள்ளன.

முன்பை விட தற்போதெல்லாம் தீவிபத்து மற்றும் நிலச்சரிவு அல்லது விபத்துக்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு நடந்த அடுத்த விநாடியில் பொது மக்களிடமிருந்து வந்துவிடுகிறது. முன்பெல்லாம் தீயணைப்புத்துறை 101 என்கிற எண்ணுக்கு அவர்கள் போன் செய்து சொல்லும்போது கூட பல நிமிடங்கள் சில சமயங்களில் மணிக்கணக்கில் கூட தாமதமாக தகவல் வந்ததுண்டு.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு சிறிய விபத்துகள் குறித்த தகவல்கள் கூட விபத்து நடந்த அடுத்த நிமிடமே எங்களுக்கு வந்துவிடுகிறது. அதற்குக் காரணம் 108 ஆம்புலன்ஸ்கள்தான்.

எங்கே விபத்து நடந்தாலும் 108க்கு மக்கள் தகவல் தருகிறார்கள். அந்த தொலைபேசி சென்னை லைனுக்கு போய் விபத்து நடந்த இடம் குறித்த தகவல்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டு, சம்பவம் நடந்த பகுதியின் 108 ஆம்புலன்ஸிற்கு தெரிவிக்கப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் புறப்படும்போது எங்களுக்கு தெரிவிக்கின்றனர். எனவே 108 என்பது 101 உடன் இரண்டற கலந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் எஸ்.ஆர்.சந்திரனிடம் பேசிய போது, '108 சேவை எங்களுக்கு உதவியாக இருப்பது நிஜம்தான். அவர்களும் நாங்களும் இரண்டற கலந்தே பணியாற்றுகிறோம். தீயணைப்பு மீட்புப் பணி அலுவலகங்கள் மாவட்ட அளவில் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டாலும், விபத்துகளின் தன்மை மற்றும் மீட்பு நடவடிக்கைக்குத் தேவையான பணியாளர்கள் கருவிகள் பொறுத்து எந்தந்த மாவட்டங்கள் என்றில்லாமல் அனைவரும் இணைந்தே ஒருமித்து பணிபுரிய வேண்டியிருக்கிறது. எனவே பணியாளர்கள் குறைவு என்பதால் எந்த பணியும் பாதிப்படைவதில்லை. இருப்பினும் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப இயக்குநர் அலுவலகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x