Published : 19 Mar 2022 07:46 AM
Last Updated : 19 Mar 2022 07:46 AM

மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்த மாநில வரைவு விதி தொழிலாளருக்கு பாதிப்பில்லாமல் வடிவமைக்கப்படும்: சி.வி.கணேசன் உறுதி

சென்னை: மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்து, தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மாநில வரைவு விதிகள் வடிவமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்து தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த்,தொழிலாளர் நலத்துறை செயலர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்தும், அச்சட்டத் தொகுப்புகளில் உள்ளடங்கியுள்ள சட்டங்கள் குறித்தும் தற்போதுள்ள சட்டங்களுக்கும் புதியசட்டத் தொகுப்புகளுக்குமான ஒப்பீடு குறித்தும் தொழிற்சங்க தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன்பேசுகையில், ‘‘புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்து தொழிற்சங்கங்களால் முன் வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, தொழிலாளர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் மாநில வரைவு விதிகள் வடிவமைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x