Last Updated : 09 Apr, 2016 09:34 AM

 

Published : 09 Apr 2016 09:34 AM
Last Updated : 09 Apr 2016 09:34 AM

பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி

திருச்சியில் பாஜக நடத்தும் வேட் பாளர்கள் அறிமுகக் கூட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் 13-ம் தேதி திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், கட்சியின் தேசியச் செயலாளர் முரளிதர்ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேச உள்ளனர்.

இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உளவுப் பிரிவு உதவி இயக்குநர் மதியழகன், மாநில உளவுப் பிரிவு டிஎஸ்பி தர் உள்ளிட்ட அதிகாரிகள் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அமித்ஷா உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர் என்பதால், டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புப் படையி னர் ஓரிரு நாட்களில் திருச்சிக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறமிருக்க, வேட்பாளர் கள் அறிமுகக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, பாஜகவின் திருச்சி மேற்குத் தொகுதி பொறுப்பாளர் இல.கண்ணன் சார்பில், இரு தினங்களுக்கு முன், மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான மா.கணேஷ்குமாரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், பொதுக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் 300 கொடிகள் மட்டுமே கட்ட வேண்டும். 21 விளம்பரப் பதாகைகள் மட்டுமே அமைக்க வேண்டும். 50 ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும். கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி அனுமதியின்றி சுவரொட்டிகளோ, விளம்பரப் பதாகைகளோ இருக்கக் கூடாது. கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக பதாகைகள், கொடி களை அகற்றிவிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். விதிகளை மீறினால் உடனடியாக அனுமதி ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

300 கொடிகளுக்கு அனுமதி

இதுகுறித்து, பாஜக திருச்சி மேற்கு தொகுதி பொறுப்பாளரான இல.கண்ணன் கூறும்போது, “இக்கூட் டத்தில் தேசிய, மாநில அளவிலான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி 1,000 இடங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், 300 கொடிகளுக்கு மட்டுமே தற்போது அனுமதித்துள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் மனு அளிக்க உள்ளோம்.

இரவு நேரத்தில் நடத்தப்பட உள்ள இந்த கூட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வர உள்ளதால், பாதுகாப்பு கருதி ஹாலோஜென் உள்ளிட்ட விளக்குகளின் எண்ணிக் கையையும் தற்போது உள்ளதைவிட அதிகரித்து தர வேண்டும் என அனுமதி கேட்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x