

கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டத்தை, வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார் மேயர் கவிதா.
கரூர் மாவட்டம் அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 9-ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத்தையொட்டி பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உற்சவர் சிலைகளுக்கு இன்று (18-ம் தேதி) சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டது. பங்குனி தேதோட்டத்தை கரூர் மாநகர மேயர் கவிதா கணேசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி வடக்கு ரத வீதியில் இருந்த சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன. மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டன. தேர் 4 வீதிகளை சுற்றி வலம் வந்தது. இதனிடையே, 19-ம் தேதி நாளை ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மேலும், நாளை இரவு ரிஷப வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 22ம் ஸ்ரீ சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலாவுடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.