Published : 06 Apr 2016 05:20 PM
Last Updated : 06 Apr 2016 05:20 PM
திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின் பின்னால் இருந்துகொண்டு ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் சந்திரகுமாரை இயக்குகிறார்கள் என்று தேமுதிக பொருளாளர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''திமுகவுடன் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்று தேமுதிக விவாதித்தது உண்மை. இல்லையென்று சொல்லவில்லை.
2011-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதற்குப் பிறகு கூட்டணி உறவை முறித்துக்கொண்ட பிறகு எங்கள் கட்சியில் இருந்து 9 பேரை அதிமுக விலை கொடுத்து வாங்கியது.
தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைத்து 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால், அப்போது மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தால், திமுகவை எதிர்த்து தேமுதிக கேள்வி கேட்கும்போது தேமுதிகவை முடக்கத்தான் பார்த்திருப்பார்கள்.
அதிமுகவில் நடந்ததைப் போல திமுகவில் நடந்துவிடக்கூடாது என்று விஜயகாந்த் முன்கூட்டியே சிந்தித்தார். ஈரத்துண்டை போட்டு கழுத்தை அறுத்துவிடுவார்கள் திமுகவினர் என்றுதான் விஜயகாந்த் அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று முடிவெடுத்தார்.
திமுகவுடன் கூட்டணி இல்லையென்று வந்த பிறகு சில கைக்கூலிகளை வைத்துக்கொண்டு எங்கள் இயக்கத்தை பிளவுபடுத்த திமுக நினைக்கிறது.
திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சந்திரகுமார் போலி மாயையை ஏற்படுத்திகிறார். சந்திரகுமார் உள்ளிட்டோரின் இந்த செயலுக்குப் பின்னால் திமுக உள்ளது.
திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின் பின்னால் இருந்துகொண்டு ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் சந்திரகுமாரை இயக்குகிறார்கள். இந்தப் பணியை அவர்கள் தொடர்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.
தேமுதிக வலுவோடு இருக்கிறது. மக்கள் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். தேர்தல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். விஜயகாந்த் முதல்வர் ஆவார்'' என்றார் இளங்கோவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT