Published : 17 Mar 2022 06:34 AM
Last Updated : 17 Mar 2022 06:34 AM

என்எல்சி, சோலார் எனர்ஜி நிறுவனங்களுடன் 2,900 மெ.வா. மின்சாரம் வாங்க டான்ஜெட்கோ ஒப்பந்தம்: ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: என்எல்சி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களுடன் டான்ஜெட்கோ குறைந்த விலையில்2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) ஒப்பந்தம் மேற் கொண்டது.

என்எல்சி நிறுவனம் 800 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் உற்பத்திஅலகுகளை ஒடிசாவின் தலபிராவில் அமைக்கிறது. அதில் 11,500மெகாவாட் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2026-27-ல் உற்பத்தி தொடங்கும்.

நிலக்கரி சுரங்கத்துக்கு அருகில்இருப்பதால் என்எல்சி, யூனிட்டுக்குரூ.3.06 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 2026-27 முதல் 1,500 மெகாவாட் மின்கொள்முதல் செய்வதுதொடர்பாக என்எல்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,டான்ஜெட்கோவுக்கு தனி நிலக்கரிசுரங்கம் ஒதுக்கப்படும் என்றும், 2,700 மெகாவாட் கூடுதல் மின்சாரம்தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கொள்கைபடி ஒரு யூனிட் ரூ.2.61 விலையில் 1,000 மெகாவாட் சூரிய மின் சக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த மின்சாரம் 2022-23-ம் ஆண்டு இறுதியில் கிடைக்கும்.

இதேபோல, பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன், 4 நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் ஒப்பந்தக் காலம் 3 ஆண்டுகள்.

ரூ.15.16 கோடி ஈவுத்தொகை

தமிழ்நாடு பவர் லிமிடெட், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் என்எல்சி-ன்கூட்டு முயற்சி நிறுவனத்தில், 2 அலகுகளில் தலா 500 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழக மின் உற்பத்திக்கழகத்துக்கு 11 சதவீத பங்குகள்உள்ளன. 2021-22-ம் ஆண்டில் முதல் 9 மாதங்களுக்கான ரூ.182.01கோடி லாபத்தில், பங்கு ஈவுத்தொகையான ரூ.15.16 கோடிக்கானகாசோலையை முதல்வர் ஸ்டாலினிடம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மத்திய நிலக்கரித் துறைச் செயலர் அனில்குமார் ஜெயின், எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x