Published : 16 Mar 2022 08:02 PM
Last Updated : 16 Mar 2022 08:02 PM

சீமை கருவேல மரங்களை அகற்ற விரைவில் கொள்கை முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சீமை கருவேல மரங்கள் | கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐஎஃப்எஸ்) அதிகாரிகள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்ய சென்றக் குழு அறிக்கையை அளித்துள்ளது.

இந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம், சீமை கருவேல மரங்கள், இயந்திரங்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்படுகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து, மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்கின்றன. சீமை கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.

இதே நடைமுறையை பின்பற்ற தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் குழு அளித்த அறிக்கைகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விஷயத்தில் விரைந்து கொள்கை முடிவெடுக்கும். எனவே அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x