Published : 16 Mar 2022 07:29 AM
Last Updated : 16 Mar 2022 07:29 AM

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் மார்ச் 21-ல் ராகு, கேது பெயர்ச்சி விழா: இன்று லட்சார்ச்சனை தொடக்கம்

கும்பகோணம்/மயிலாடுதுறை: ராகு, கேது பெயர்ச்சி மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதன்படி, ராகுபகவான் மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3.13 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவாகன் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

இதையடுத்து, தஞ்சாவூர்மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுஸ்தலம் எனப்படும் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவான் சன்னதியில் மார்ச் 19-ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. தொடர்ந்து, 4 கால யாகசாலை பூஜைகளுக்குப் பின், மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. அன்று மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று (மார்ச் 16) தொடங்கி 18-ம் தேதி வரையும், பின்னர் மார்ச் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியையொட்டி, கேதுபகவான் சன்னதியில் மார்ச் 21-ம் தேதி கேது பகவானுக்கு குங்குமம், மஞ்சள் பொடி, பால், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.

கேது பெயர்ச்சி காரணமாக ரிஷபம், கடகம், துலாம், மகரம்ஆகிய ராசியினர் சிறப்பு பரிகார பூஜை செய்ய கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x