

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பணியாளர்களின் குழந்தைகள் லட்சக்கணக்கில் படித்து வருகின்றனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருந்தாலே முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்க நடைமுறை விதிகள் உள்ள நிலையில் தற்போது 23 சதவீத பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 101 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.577 கோடி மட்டு ஒதுக்கியுள்ளது. எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், அப்பள்ளிகளுக்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அதேபோல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.