Published : 15 Mar 2022 04:00 AM
Last Updated : 15 Mar 2022 04:00 AM

பேரூராட்சியில் முதல்முறையாக 100 நாள் வேலை திட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கிராமங்களை தவிர்த்து பேரூராட்சிகளில் நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்த நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நேற்று அத்திட்டத்தில் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார்.

நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் மாவட்டத்துக்கு ஒரு பேரூராட்சியில் நூறு நாள் திட்டப் பணிகளை செயல்படுத்த அரசு அனுமதித்தது.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செர்வன்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி துணைத்தலைவர் சாமிநாதன், பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர் ஜீலான் பானு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கூறுகையில், கண்மாயில் தூர்வாருதல், சாத்தியாறு ஓடை பராமரிப்பு, வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

15 வார்டுகளில் தலா 15 பேர் வீதம், இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வார்டு மக்கள் தொகை அடிப்படையில் விருப்பம் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x