Published : 14 Mar 2022 07:46 PM
Last Updated : 14 Mar 2022 07:46 PM

’இந்து தமிழ் திசை’ இணையதள செய்தி எதிரொலி: ஆதரவற்ற 3 சிறுவர்களுக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை

திருவண்ணாமலை ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 பிள்ளைகள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து, அடுத்த வேளை உணவுக்கே போராடிவரும் 3 சிறுவர்கள் குறித்து ’இந்து தமிழ் திசை’யின் இணைய தளத்தில் வெளியான செய்தி எதிரொலியாக, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவியின் பெயர் வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் லோகநாதன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு சென்று பிள்ளைகளுடன் வேண்டா வாழ்ந்து வந்தார். அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் கார்த்திகாவும், 9-ம் வகுப்பில் சிரஞ்சீவியும், 6-ம் வகுப்பில் நிறைமதியும் படித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேண்டாவின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும், சிகிச்சை பலனின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்தார். இதனால் தாய், தந்தையை இழந்த 3 பிள்ளைகளும், அடுத்த வேளை உணவுக்கு, கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது கல்வியும் கேள்வி குறியானது.

இது குறித்து கார்த்திகா கூறும்போது, “எங்களது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். இப்போது நாங்கள் மூவரும் ஆதரவற்று உள்ளோம். எங்களை அரவணைக்க யாரும் இல்லை. பள்ளியில் வழங்கும் மதிய உணவை உட்கொள்கிறோம். மேலும் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் செய்து வரும் உதவியால், மேலும் ஒரு வேளை உணவு கிடைக்கிறது. பள்ளி இல்லாத நாட்களில் உணவுக்காக காத்திருப்போம். பசியின் வலியை அனுபவித்து வருகிறோம். இதேபோன்று எங்களால் தொடர்ந்து வாழ முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

எங்களது ஓட்டு வீடும் பழுதடைந்து கிடக்கிறது. மழை காலத்தில் ஒழுகும். வீட்டில் உள்ளே இருக்க முடியாது. எந்த நேரத்தில் இடிந்து விழும் என தெரியவில்லை. நாங்கள் மூவரும் தனியாக வசிப்பதால் அச்சமாக இருக்கிறது. நாங்கள் மூவரும் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். எங்களது படிப்பு தடையில்லாமல் இருக்க முதல்வர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் உதவிட வேண்டும். உயர் கல்வி வரை படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் அரசு திட்டத்தின் மூலம், எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’யின் இணையதளத்தில் நேற்று (13-ம் தேதி) செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 3 சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் தலைமையிலான குழுவினர் ஆவணியாபுரத்தில் முகாமிட்டு, மூன்று சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

கோட்டாட்சியர் விஜயராஜ் கூறும்போது, “உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தாய் வேண்டா மரணமடைந்ததால், ஈம சடங்கு நிதியாக ரூ.22,500, கார்த்திகாவின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளோம். குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூன்று சிறுவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், அவர்களது பூர்வீக வீட்டை, அவர்களது பெயருக்கு மாற்றம் செய்து கொடுக்க உள்ளோம். அந்த இடத்தில் பசுமை வீடும் கட்டி கொடுக்கப்படும்.

அடுத்த கல்வியாண்டு முதல், திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் 3 சிறுவர்களையும் பாதுகாத்து உயர்கல்வி வரை பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, 3 சிறுவர்களும் அவர்களது அத்தையுன் அரவணைப்பில் உள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டதால், நடப்பு கல்வியாண்டு வரை, அவர்கள் அங்கேயே இருக்க அனுமதித்துள்ளோம். 3 சிறுவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். அவர்கள் மூவரையும் கண்காணிப்பில் வைத்திருப்போம்.

பல்வேறு பணிகளுக்கு இடையே 3 சிறுவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு நாள் முழுவதும் பணியாற்றிய மனதுக்கு நிறைவை கொடுத்துள்ளது” என்றார். மேலும் 3 சிறுவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உதவுவதற்கான உதவும் கரங்கள் நீள்கிறது. நிதி உதவி என பல்வேறு வகைகளில் உதவிகளை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x