Published : 23 Apr 2016 07:35 AM
Last Updated : 23 Apr 2016 07:35 AM

பூத் சிலிப்பை காட்டி வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது: திமுக மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை ஆதாரமாகக் காட்டி வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி திமுக அளித்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது “புகைப்படத் துடன் கூடிய பூத் சிலிப்பை தேர்தல் ஆணையம் தகுதியுள்ள எல்லா வாக்காளர்களுக்கும் வழங்கினால், ஓட்டுப்போடும்போது பகுதி எண், வரிசை எண் மற்றும் வாக்காளர்களை பூத் அதிகாரிகள் எளிதில் அடையாளம் கண்டு ஓட்டுப்போடும் நேரம் மிச்சமாகும்” என கோரிக்கை வைத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் இந்த வேலையை அப்போது சரியாக செய்யவில்லை.

ஆனால், கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளு மன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பாக புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சாதகமாகி விடும்

இந்த பூத் சிலிப்பை 11-வது ஆவணமாக காட்டி வாக்காளர்கள் ஓட்டுப்போட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்த பூத்சிலிப் மூலமாக ஆளுங்கட்சியினர் கள்ள ஓட்டுப்போட வாய்ப்புள்ளது. இந்த பூத் சிலிப் வழங்கும் பணியை வாக்குச்சாவடி அதிகாரிகள், அந்தந்த பகுதி சத்துணவு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களை ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் எளிதாக அணுக முடியும் என்பதால் பூத் சிலிப் ஆளுங்கட்சிக்கு சாதகமாகி விடும். எனவே புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை ஒரு ஆதாரமாக காட்டி ஓட்டுப்போட முடியும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். இந்த மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘மனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தற்போது தேர்தல் அறிவிப்பு நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த வழக்கின் தகுதிக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் தகுந்த பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x