Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM

பெண் வார்டனுக்கு பாலியல் தொல்லை: 3 ஆண் வார்டன்களின் குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை

பெண் வார்டனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ஆண் வார்டன்கள் 3 பேருக்கு அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெல்லை மாவட்டம் குலவணிகர்புரம் அரசு ஆதி திராவிடர் விடுதிவார்டனர்களாகப் பணிபுரிபவர்கள் சரவணன், நடனசிகாமணி, இகநாசி.இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டகுற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: குலவணிகர்புரம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி வார்டனாகப் பணியாற்றிய பெண்ணுக்கு, மனுதாரர்கள் மூவரும் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் வந்துள்ளது. அதன்பேரில் மூவருக்கும் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அது நம்பத்தகுந்ததாக இல்லை.மனுதாரர்கள் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவின் கீழ் அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது இந்த வழக்கை விசாரித்து நான்கு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால் அதையும் விசாரணை அறிக்கையில் குறிப்பிட வேண்டும். மனுதாரர்கள் மீது துறை ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ளலாம். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x